வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

26 மார்ச், 2011

ஒளி வழியும் திரியின் நுனியில்

ஒத்திசைந்தேகும்
இருவரினதுமானதோர் செய்கையில்
இரு முனைக்கும் செல்ல மறுத்த
நியாயத்தால்
வேசியன் என்று விமர்சிக்கப்படுகிறேன்

எனக்குப் பிடித்தமான
குழவியொன்றின் பாஷையாக இல்லாமல்
அதெனக்குக்
காது குடையும் கடப்பாரையாகிறது

பொய்களால் நிரம்பிய
பேச்சைப் பருகியதன் மயக்கத்தில்
சுயபிரக்ஞை ஏதுமற்று
என்னால் வெட்டி வீழ்த்தப்பட்ட
உண்மையின் சாபம்தான் இது

எனக்குப் புரிய வெகுநாளானது
புணர்ப்பில் பிறக்கும் சிறுமுனகலில்
கிட்டும் வலியூறிய மகிழ்ச்சி
எல்லா தருணத்திலும் கிட்டுவதேயில்லை

ஒளி வழியும் திரியின் நுனியில்
வாழ்க்கை சடசடக்கிறது.

16 மார்ச், 2011

வெங்காயம்

ன்றாகப் பழகியதொரு பாதை
எனைக் கடந்துகொண்டிருக்கும் பொழுது
திருப்புமுனை ஒன்றில் உனைச் சந்தித்தேன்
அதுவரை
கனவுகளால் செப்பமிடப்பட்ட அந்தப் பாதை முழுக்கவும்
நானே நிரம்பியிருப்பதாய் உணர்ந்திருந்தேன்
இலவு காத்த கிளி போல அல்லாமல்
பறந்து போன பஞ்சாகியது
சூழல் புதிதானது
நீயும் புதிதானாய்
பிறிதொரு நாள்
உன்னுள் நானும் என்னுள் நீயுமாய்
உறைந்து கிடக்கிற பொழுது
நன்றியுள்ள ஜீவனுக்குச் சிறுவயதில்
நான் வீசிய கல் போல
எனக்கே திரும்பியது
உன் மறுமுனையில் நான் என்றானபிறகு
நமக்கிடையில் யாரோ
நடந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள்
இந்த முறை
இலவு காத்த கிளியோ
விலை கூறப் போகிற வெங்காயமோ?

ஐகாரக் குறுக்கம்



யாப்பிலக்கணத்தில் எழுத்து வெறும் மூன்று வகை மட்டுமே என்பது இலக்கண வல்லுநர்களான உங்களில் பெரும்பாலானவருக்குத் தெரிந்திருக்கும். அடியேனுக்கு ஒரு சிறிய ஐயம் உண்டு. அதைப்பற்றித்தான் இந்த இடத்தில் தெரிந்துகொள்ள முடியுமா என்று முயற்சி செய்கிறேன்.

யாப்பு இலக்கணத்தில் மூன்றே எழுத்துக்கள் என்பது குறில், நெடில், ஒற்று என்பது மட்டுமே. அப்படியானால் குறுக்கங்கள் என்று நாம் படிக்கும் இலக்கணம் யாப்பு இலக்கணத்தில் பயன்படுத்த முடியாதா? இந்த விடயத்தில் திருவள்ளுவரும் தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன். நான் பார்த்த அளவுக்கு இந்தப் பிரச்சனைக்கு அவர் இடமே தரவில்லை. குறிலாக எடுத்துக்கொண்டாலும் சரி.... நெடிலாக எடுத்துக் கொண்டாலும் சரி.... தளை தட்டுவதே இல்லை அவரது குறளில்.

ஆனால் நந்திக் கலம்பகத்தில் ஒரு வெண்பாவில்,

ஈட்டுபுகழ் நந்தி பாணநீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடியளவும் காட்டிலழும்
பெயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றாள் நீயென்றேன் நான்.

என்னும் வெண்பாவில் எங்கையர்தம் என்னும் சீரைக் கவனித்தால் அதில் வரும் ஐகாரமானது ஐகாரக் குறுக்கமாகத்தான் இருக்கிறது. நந்திக் கலம்பக ஆசிரியரும் குறுக்கம் (வெண்பாவிலும் வரலாம்; அது நெடில் அல்ல. மாறாக, அது யாப்பில் குறிலாகவே கொள்ளப்படும்.) என்பதை மனதில் கொண்டுதான் அந்த வெண்பாவை இயற்றியிருக்கிறார். நெடிலாகக் கொண்டால் தளை தட்டும்; இலக்கணப் பிழை ஏற்படும்.

எனவே, வல்லுநர்களாகிய நீங்கள் ஐகாரக் குறுக்கம் நெடிலல்ல; அது குறில்தான்; வெண்பாவில் ஐகாரக் குறுக்கத்தைக் குறிலாகவே வெண்பாவில் பயன்படுத்தலாமா என்பதை எனக்கு விளக்குங்கள்.

15 மார்ச், 2011

வனைவேன் எனது வாழ்க்கையை!


நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று
நித்தம் இதுதான் வாழ்க்கையா?
வினையெதும் இன்றி வெற்றுடம் பாக
வெந்திடு வேனோ புவியில்?
மனத்துள் வளர்த்த ஆல மரத்தை
வஞ்சனையால் சாய்த்தவர் யார்?
வனைவேன் எனது வாழ்க்கையை நானே
மானுடம் போற்றும் தூணே!