வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

23 ஏப்ரல், 2011

சுதந்திரமாய்ப் பறக்கும் பட்டம்


சிறகுகள் படபடக்க நிற்கும் இடத்திலிருந்து
கற்பனைக்கு எட்டாத உயரத்தில்
பறந்து கொண்டிருப்பாய்
உன் கைகளும் கால்களும்
அததன் போக்கில் தன்
கடமையைச் செய்து கொண்டிருக்கின்றன
வெகு யுகங்களாய்
யாரும் புரியாத சாதனையை
நீ நிகழ்த்திவிட்டதாய் உன்னை அறிந்தவர்கள்
புளகாங்கிதத்தோடு
புகழக்கேட்டிருப்பாய்
பாராட்டு மொழியில்
உன் உடல் முழுக்கவும்
உடலை இரும்பெனத் துளைக்கும்
பனிக்கட்டியாய்க் கெட்டித்துப் போயிருக்கும்
ஆனாலும், மறந்துவிடாதே
இந்த பூமியின் முளைக்குச்சியில்
மாயக் கயிற்றால் கட்டப்பட்டிருக்கின்றன
உனது கைகளும் கால்களும்
சிறகுகளோடு சேர்த்து.

18 ஏப்ரல், 2011

49 ஓ - வாக்களிக்க விருப்பம் இல்லை வசதியில் திருத்தம் தேவை!

வாக்காளர்கள் மத்தியில், "யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்கிற பிரிவு பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது,'' என்று தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார். தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, "49 ஓ' குறித்து தெரிவித்த கருத்து: சட்டசபை தேர்தலில், 78 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தலை விட, 7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொருவரும், ஓட்டளிப்பது ஜனநாயக கடமை என்பது வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில், யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை என்கிற, "49 ஓ' பிரிவு, குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு செய்தித்தாள், ஓட்டுச்சாவடி ஆகியவற்றில் "49 ஓ' பிரிவு குறித்து விளம்பரப்படுத்தப்பட்டது. தேர்தல் கமிஷனின், இந்த நடவடிக்கையால், தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் மத்தியில், "49 ஓ' பிரிவு குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நரேஷ் குப்தா கூறினார்.

என்று நாளிதழ்களிலும் பிற இதழ்களிலும் செய்திகள் வெளியாகி பெருமையோடு மார்தட்டிக் கொள்கின்றன. இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்த இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் அதே சமயத்தில் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிர்பந்தமும் வாக்காளர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. பல சிரமங்களுக்குப் பிறகுதான் 49 ஓ வசதியைப் பயன்படுத்த முடியும். எழுத்து மூலமாக எழுத வேண்டும்.... கையெழுத்திட வேண்டும்.... வாக்காளர் 49 ஓ-வைப் பயன்படுத்துகிறார் என்ற செய்தி வாக்களிக்கும் அறையில் (Booth) உள்ள அனைவருக்கும் தெரிய வருகிறது. ஆனால்,  வேட்பாளருக்கு வாக்களிக்கும்போது மட்டும் மறைமுகமாக வாக்களிக்கும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த 49 ஓவுக்கு மட்டும் என்ன அவலம்? செய்தி ஊர் முழுக்கத் தெரிய வருகிறது. தான் அளிக்கும் வாக்கு யாருக்கு அளிக்கப்பட்டது என்ற ரகசியத்தைக் காக்க வேண்டியதும் தேர்தல் ஆணையத்தின் கடமை. இந்த அவலத்தைப் போக்க வேண்டும். அதாவது 49 ஓ வசதி வாக்குப் பதிவு எந்திரத்திலேயே ஒரு வசதியாக இருக்க வேண்டும். தவிர்த்து அறையில் உள்ள பணியாளர்களால் உதவப்பட்டு 49 ஓ வசதியைப் பயன்படுத்துமாறு இருக்கும் இந்த நிலைமை அடுத்த தேர்தலில் அல்லது பிற மாநிலத் தேர்தலில் கட்டாயம் மாற்றப்பட வேண்டும். அப்பொழுதுதான் நம் தலைவர்களின்! உண்மை நிலையை உணர முடியும். மக்களின் மன நிலையை அறிய முடியும்.

3 ஏப்ரல், 2011

எண்ணங்கள் குருதியைப் பாதிக்கும்?

நம் எண்ணங்கள் நமது குருதியை பாதிக்குமா? அதன் மூலம் உடல் நலத்தைப் பாதிக்குமா? திருவள்ளுவர் தனது திருக்குறளில் நல்லவர்கள் தண்டனையை அனுபவிப்பதும் தீயவர்கள் சுகபோகமாய் வாழ்வதும் கண்டு ஆச்சரியப்படுகிறார். தர்மம்தான் ஜெயிக்கும் என்ற கோட்பாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர் அவர். ஆனால், எக்காரணத்தால் தீயவர்கள் தண்டிக்கப்படாமல் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்பது தெரியாமல் வியக்கிறார்.

'அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்பது தமிழர்களிடையே வழங்கும் ஒரு முக்கியமான பழமொழி. இதன் தர்க்கமும் அப்படித்தான். தெய்வம் உண்டோ இல்லையோ.... கம்பர் வார்த்தையில் சொல்வதென்றால், 'இன்றே என்னின் இன்றேயாம்; ஆமென் றுரைக்கின் ஆமேயாம்!' காலகாலமாக விவாதிக்கப்பட்டு இன்று வரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிற இந்த விவாதத்திற்கு நாம் இங்கு வரவில்லை. மாறாக, கெட்ட எண்ணங்கள் எப்படிக் குருதியைப் பாதிக்கின்றன்? கெட்ட எண்ணம் கொண்டவன் எப்படிக் கெட்டழிவான் என்பது குறித்துதான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

அறிஞர் ஒருவர், நல்ல எண்ணம் உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கம். கெட்ட எண்ணம் ரத்தத்தை மாசுபடுத்தி உடலுக்குள் நோயினை உற்பத்தி செய்து கேடெண்ணம் கொண்டவனைச் சாகடித்துவிடும் என்று எழுதுகிறார்.

இந்த விடயத்தைப் பற்றிப் பேசுவதற்குப் போதுமான அறிவு எனக்கு இல்லைதான். ஆனால், அது எப்படிச் செயல்முறையாகிறது என்று எனக்குள்ளாகவே கேள்விகள் பலவற்றை எழுப்பி அதற்கான விடையையும் என்னால் அறிய முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன்.

இந்த விடயமானது உளவியல் சம்பந்தப்பட்டது. உளவியலில் Reflection-பிரதிபலிப்பு சம்பந்தப்பட்டது. நோய்கள் கிருமிகளால் வருகின்றனு என்னும்  கருத்து மருத்துவ ரீதியில் 100% உண்மையானதாகவே கருதப்படுகிறது. ஆனால், உளவியல் ரீதியாக இந்தக் கருத்தில் முழு உண்மை இருக்கவில்லை.

மக்கள் மத்தியில் நோயானது இன்னும் பல வழிகளில் வருகின்றன என்னும் கருத்தை முற்று முழுதாக நம்பி வருகின்றனர். உதாரணமாக, காய்ச்சலைக் குறிப்பிடலாம். காய்ச்சல் எதன் மூலமாக வருகின்றது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், பயந்துவிட்டதால் காய்ச்சல் வந்துவிட்டதாகச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  பில்லி சூன்யத்தின் மூலமாகப் பித்து பிடித்தல் முதலான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதாக மக்கள் நம்புவது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இவைகள் எல்லாம் எப்படிச் சாத்தியமாகும்?

இதுகூட முற்று முழுக்க உளவியல் ரீதியாகவே நிகழ்ந்தேறுகின்றன. ஒருவர் ஒரு சிறிய பொய் ஒன்றைச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அது பொய் என்று மற்றவர்கள் உணராதவாறு, உண்மைதான் என்று நம்பும்படியாகச் சொல்வார்கள்; அவர்களும் 100% உண்மைதான் என்று நம்பலாம். ஆனால், அது பொய் என்ற விடயம் சொல்பவருக்குத் தெரியாமல் போய்விடுமா என்ன? எவ்வளவு பெரிய கல் நெஞ்சம் கொண்டவராக இருந்தாலும் அவருக்கும் மனது என்பது உண்டுதானே? மனசாட்சி என்பது கண்ணிமை அளவாவது இருக்கும்தானே? அதுவே போதும் அவரைத் தண்டிப்பதற்கு.

ஆக, எண்ணங்கள் அவர் சிந்தனையைத் தூண்டுகின்றன. நல்லெண்ணமாக இருந்தால் மகிழ்ச்சியையும் கெட்ட எண்ணமாக இருந்தால் அவர் நலத்திற்கு எதிரான நிலையையும் ஏற்படுத்துகிறது. உள்ளிருக்கும் எண்ணங்கள் அவரது செயலை நிர்ணயிக்கின்றன. அவரது செயல் பிறரது மனதையோ அல்லது பிறவற்றையோ பாதிப்படையச் செய்கிறது. அந்தப் பாதிப்பின் மூலமாக எதிராளியின் செயற்பாடுகள் இவரை வந்தடைகிறது. நற்செயலாக இருந்தால் நற்பலனையும் தீய எண்ணமாக இருந்தால் எதிர்நிலைப் பலனையும் அடைய நேர்கிறது. இப்பொழுது சொல்லுங்கள்..... இது Reflection Theory மூலும் இயங்கக்கூடிய நியாயத் தீர்ப்புதானே?

எனவே, கெட்ட எண்ணம் கொண்டவர்கள் யாராலும் தண்டிக்கப்படாமலேயே தானே கெட்டழிவர். தூய எண்ணம் கொண்டவர்கள் மாசடையாத குருதியோடும் பாதிப்படையாத உடல் நலத்தோடும் வளமாகவே பல காலம் வாழ்வர். இந்த நியாயத் தீர்ப்பில் சிறிது கால இடைவெளியில் வேண்டுமானால் மேற்படி தர்க்கப்படி செயல்படாமல் போகலாம். ஆனால், இறுதியில் 'தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்' என்ற மகாகவி பாரதியாரின் கூற்றுப்படியே முடியும்.

2 ஏப்ரல், 2011

இந்தியா-இலங்கை உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா வெற்றி!

ஒரு ரன் கூட எடுக்காத நிலையிலேயே மட்டையைக் கையில் பிடித்த உடனேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு ஆளான நம் துக்கத்தை எதைச் சொல்லி ஆற்றுவது? தொலைக்காட்சிப் பெட்டியை உடைக்கலாமா என்றுகூட வார்த்தைகளில் வெளியிட முடியாத கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.  உடனடியாக எனது நண்பனுக்கு அழைத்தேன். இது முன்பே முடிவு செய்துவிட்ட ஆட்டம் என்றான். அவனுடைய கூற்றுக்குக் கல்லூரி பேராசிரியரையும்-அவரது வாக்கையும் சாட்சிக்கு அழைத்தான். ஒருவழியாக இறுதியில் இந்தியா வென்று காட்டியது. முன்பே தீர்மானிக்கப்பட்ட ஆட்டம் அல்ல என்பது இறுதியில் இந்திய வீரர்கள் உலகறியச் செய்தார்கள்.

ஆனால், இரண்டு முறை டாஸ் என்ற தடுமாற்றத்துடனே துவங்கிய ஆட்டத்தில்கடைசிவரை ஒரே மாதிரியே பந்துகளுக்கும் எடுக்க வேண்டிய ரன்களுக்குமான எண்ணிக்கை இருந்தது இது முன்கூட்டியே தீர்மானம் செய்து ஆடப்படுகிற ஆட்டமோ என்ற சந்தேகம் வந்ததை தவிர்க்க முடியவில்லை.

இலங்கைப் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் டென்ஷனானது தெரிந்தது. தோட்டக்காரனுக்குத் தெரியாமல் திருட்டு மாங்காய் அடிக்க, கல்லை வீசுவது போன்றே பாட்ஸ்மேன்களின் கால்களைக் குறி வைத்துப் பந்தை 'எறிந்தார்கள்' வீசுவதற்கு பதிலாக.ஆனால் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அளவுக்கு அழுகுணி ஆட்டம் ஆடாமல் தோற்கப் போகிறோம் என்பதைப் புன்னகையுடனேயே இலங்கை அணியின் கேப்டன் ஏற்றுக் கொண்டது ஒரு கவிதை.

கடைசி ஓவரைத் தான்தான் அடித்து முடிக்க வேண்டுமென்ற தோணியின் பிடிவாதத்தைத் தளர்த்தியிருக்கலாம்.

முன்பே சுலபமாக அடித்து முடிக்க வேண்டிய ஆட்டத்தை மெதுவாக நகரும் மிஷ்கினின் மர்மப்படம் போல மந்த கதியில் கொண்டு சென்று கடைசியில் காத்திருந்த மகாஜனங்களுக்கு போனால் போகிறதென்று ஒரு சிக்ஸரைத் தந்த தோனிக்கும் அரைமில்லிமீட்டர் அளவூக்கு ஒரு சின்ன சிரிப்பைத் தந்து விடுவோம்.

இருபத்தெட்டு வருடங்கள் கழித்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றியிருக்கிறது. இந்தியன் என்பதில் அளவுகடந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்படுகிறது. இந்திய வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைச் சொல்லிவிடுவோமே.... இந்த நள்ளிரவிலும் பட்டாசு சப்தங்கள் கேட்க ஆரம்பித்து விட்டன. நாமும் கொஞ்ச நேரம் வெடித்துவிட்டு இப்பொழுது உறங்குவோம். நாளை கொண்டாடுவோம்.