பாண்டவ பத்தினியின்
முடிவுறாப் புடவையாய்
முன்னால் கிடக்கும்
இருபது முப்பது வருடங்கள்
கற்பனைகளின் சுழல் கரத்தால்
சிக்கென்று இழுக்கப்பட்டன
முதுகுக்குப் பின்னால் ஓடி விழுந்த பின்னர்
சரீரம்
சண்டமாருதத்தின் மேல் ஆரோகணித்து
தமிழகத்தின் மேடு பள்ளங்களில்
முகம் புதைத்துக்
காமம் தணிக்கப் புறப்பட்டது
சிங்காரச் சென்னையில் புறப்பட்ட பயணம்
மதுரை, கன்னியாகுமரி,
ஊட்டி, கொடைக்கானல் எனத் தொடர்ந்ததில்
கால்வாசிக் காமம் கரைந்து போனது
வித்தியாசமாய் இருக்கட்டும் எனும் நினைப்பில்
மாதேஸ்வரன் மலை
திம்மம்
சத்திய மங்கலம் பகுதிகளில்
கால் பாவுகையில்
காதில் புகுந்த வண்டொத்த ஓசை
எஞ்சிய காமத்தை எரித்துப் போட்டது
ஓசையின் இசையிலும் பொருளிலும் லயித்த என்மை
அதனில் மயங்கிப் போனது
சிங்கம் ஒன்று ஜனனம் கண்டதாய்த்
தொடங்கிய கதை
சிறுநரி பலதால் வஞ்சிக்கப்பட்ட
இசையில் மிதந்தது
தம்மினம் தழைக்க வித்திட்டுவிட்டு
நெஞ்சுரம் கொண்ட நிகரற்ற சாமியாய்
மூலக்காட்டில் குடிகொண்டதாய்
முடிந்ததந்த கதைப்பாடல்.
குறிப்பு: சந்தன மரக் கடத்தல் வீரப்பன்(!) சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்துக்காக 04-11-2005 அன்று எழுதப்பட்டது.