வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

25 ஜூலை, 2011

வீரப்ப சுவாமி கதைப்பாடல்


பாண்டவ பத்தினியின்
முடிவுறாப் புடவையாய்
முன்னால் கிடக்கும்
இருபது முப்பது வருடங்கள்
கற்பனைகளின் சுழல் கரத்தால்
சிக்கென்று இழுக்கப்பட்டன

முதுகுக்குப் பின்னால் ஓடி விழுந்த பின்னர்
சரீரம்
சண்டமாருதத்தின் மேல் ஆரோகணித்து
தமிழகத்தின் மேடு பள்ளங்களில்
முகம் புதைத்துக்
காமம் தணிக்கப் புறப்பட்டது

சிங்காரச் சென்னையில் புறப்பட்ட பயணம்
மதுரை, கன்னியாகுமரி,
ஊட்டி, கொடைக்கானல் எனத் தொடர்ந்ததில்
கால்வாசிக் காமம் கரைந்து போனது

வித்தியாசமாய் இருக்கட்டும் எனும் நினைப்பில்
மாதேஸ்வரன் மலை
திம்மம்
சத்திய மங்கலம் பகுதிகளில்
கால் பாவுகையில்
காதில் புகுந்த வண்டொத்த ஓசை
எஞ்சிய காமத்தை எரித்துப் போட்டது

ஓசையின் இசையிலும் பொருளிலும் லயித்த என்மை
அதனில் மயங்கிப் போனது

சிங்கம் ஒன்று ஜனனம் கண்டதாய்த்
தொடங்கிய கதை
சிறுநரி பலதால் வஞ்சிக்கப்பட்ட
இசையில் மிதந்தது

தம்மினம் தழைக்க வித்திட்டுவிட்டு
நெஞ்சுரம் கொண்ட நிகரற்ற சாமியாய்
மூலக்காட்டில் குடிகொண்டதாய்
முடிந்ததந்த கதைப்பாடல்.

குறிப்பு: சந்தன மரக் கடத்தல் வீரப்பன்(!) சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்துக்காக 04-11-2005 அன்று எழுதப்பட்டது.

23 ஜூலை, 2011

ஒரு ஆல மரம் சாய்கிறது...!


அப்பாவி யாய்நின்ற ஒருவன் – அவன்
சொப்பனத்தில் கப்பலிட்ட ஒருவள் – அதைத்
தப்பாமல் துளைபோட்டு
அப்பாலே கவிழ்த்திட்டு
மறுத்தேன் – மனம் – வெறுத்தேன்.

ஐந்தாண்டு தாண்டியபின் மணப்பேன் – பின்
ஐயமேதும் இல்லாமல் அணைப்பேன் – இதை
ஒப்பினால்நான் காதலிப்பேன்
ஒப்பவில்லை என்றாலோ
காதல் – அது – போதல்.

என்றபடி கூறினாலும் நின்றாள் – எனை
எண்ணூறு பாகமாய்க் கொன்றாள் – மனம்
காதலெனுங் கொடியேற
காமமெனும் மலையேறும்
தேகம் – என் – ஆகம்.

முத்தங்கள் பன்னூறு பகிர்ந்தோம் – இரு
முந்நூறு நாட்களுடல் வகிர்ந்தோம் – என்
ஓதற்கா ரணம்பற்றி
ஓரிருதிங் கட்பிரிய
மறந்தாள் – காதல் – துறந்தாள்.

கடிதங்கள் எத்தனையோ விடுத்தேன் – அதில்
காமத்தை எழுத்தாகத் தொடுத்தேன் – ஒரு
இடிநாளில் இன்னாத
எழுத்தென்னும் விஷக்கடிதம்
வந்தது – திகில் – தந்தது.

கர்த்தருக்கோ அடித்த ஆணி கையில் – என்
கண்மணியோ இதயத்தின் மெய்யில் – அவள்
நர்த்தனம்பு ரிந்தபடி
நடமாடு கிறாளென்னுள்
மயிலாய் – மொழி – குயிலாய்.

இந்தவேளை முதலாய்ச் சகோதரி – எனை
எப்போதும் வெறுக்காமல் ஆதரி – என
பந்தபாசம் அத்தனையும்
பாராமல் சொன்னாள் “நான்
நண்பி” – நானோ – வெம்பி.

உன் பெயரன் அழுகின்றேன் ஆயா – எனை
உமாவோடு சேர்த்தேவைப் பாயா? – என்று
நன்பல்லி குரல்கேட்டு
நாத்திகத்தை மறந்தபடி
கெஞ்சுவேன் – பசியால் – துஞ்சுவேன்.

வானின்கண் தோன்றும்வில் இல்லை – உயிர்
வஞ்சிமறத் தற்பெரிய தொல்லை – உடல்
ஊனின்றி உயிரின்றி
உலவலாம்உன் நினைப்பின்றி
நடக்காது – அடி – கடக்காது.

வாழ்வென்றால் உன்னோடொன் றாவேன் – அதில்
மாற்றமென்றால் மணக்காமல் சாவேன் – இப்
பாழ்மனத்தால் பிறிதுமொரு
பாங்கான பெண்நினைக்க
மாட்டேன் - உறுதி - வேட்டேன்.