வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

25 நவம்பர், 2010

குலத்தொழிலா அரசியல்?

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சரின் புதல்வர் கொண்டாடிய பிறந்த தினவிழா, தனிப்பட்ட உரிமை சார்ந்தது. ஆனாலும், காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட ஊழியர்கள் அந்த விழாவுக்காக எடுத்துக்கொண்ட முயற்சி, பொது விவாதத்தைத் தூண்டுகிறது.

 மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளைஞர்கள் பலரும் வாரிசுகள் என்பதை தவிர, வேறு எந்தச் சிறப்புத் தகுதியையும் பெற்றிருக்கவில்லை. அரசியலின் பால் இளைஞர்கள்  ஈர்க்கப்படாமல், அரசியல் மாற்றங்களோ, நேர்மைக்கான போராட்டத்துக்கோ, உருவம் காணமுடியாது. எனவேசமூகத்தின் எல்லாத் தரப்பு இளைஞர்களும், என்ற வரிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது.

சாதாரணக் குடும்பத்தைச் சார்ந்தோர், கல்லூரிக் கல்வி போன்றவை கிடைக்காத காரணத்தால், அரசியலில் இருந்தாலும், பொறுப்புகளுக்கு வர இயலாதவர்களாக உள்ளனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் நாடு முழுவதும் ஏற்பட்டுவரும் வாரிசு அரசியலின் தாக்கம் காரணமாக, இளம் தலைமுறை  விவாதிக்க வேண்டியதன் அவசியம்  அதிகரித்து வருகிறது.

 ராஜாஜி 1952-ல், தமிழக முதலமைச்சராக இருந்தபோது குலக்கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் எந்த நோக்கத்தில் அறிமுகம் செய்திருந்தாலும், அன்றைய எதிர்க்கட்சிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, எதிர்ப்புத் தெரிவித்தன. மனிதன் செய்கிற தொழில்கள் ஜாதியப் பிரிவினையையும், அதன் காரணமாக சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளையும் உருவாக்கி வைத்தது. குலக்கல்வித் திட்டத்தின் மூலம், ஜாதிய அடையாளங்களைப் பள்ளிக் குழந்தைகள் பற்றி நிற்குமோ? ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் உணர்வு, குழந்தைகளிடம் வலுப்பெறுமோ? போன்ற கேள்விகள் காரணமாக, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, குலக்கல்வித் திட்டம் கைவிடப்பட்டது.

 மன்னரின் வாரிசு மன்னர், மந்திரியின் வாரிசு மந்திரி, படைத்தளபதியின் வாரிசு தளபதி  என்ற நடைமுறை மன்னராட்சி காலத்தில் பின்பற்றப்பட்டது. இன்று நாம் மக்களாட்சி காலத்தில் வாழ்ந்து வருகிறோம். மக்களாட்சியின் மகத்துவம் பலதரப்பட்ட மனிதர்களும் அரசியலில் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதாகும். இந்திய சமூகத்தில் ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் நீண்ட நெடும் காலமாக அரசியல் தலைமை பொறுப்புகளுக்கு வரும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர்களின் பங்கேற்கும் உரிமையை, உறுதி செய்யும் விதத்தில், தனித் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் முறை, நமது நாட்டில் உருவாக்கப்பட்டது.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், மகாத்மா காந்திக்கும், டாக்டர் அம்பேத்கருக்குமான விவாதங்களில், மிக முக்கியமானது இரட்டை வாக்குரிமை குறித்தது. இப்போது பெண்களும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கும் நிலையை உருவாக்க, மகளிர் இடஒதுக்கீடு குறித்த விவாதம், பொதுத் தளத்தில் தீவிரமடைந்துள்ளதுமேற்படி இரண்டும் அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்ற ஜனநாயகத் தேவையில் இருந்து முன்வைக்கப்படுகிறது.

பொதுவாழ்வில் ஆட்சி செய்யும் உரிமையைப் பெறுதலும், ஆட்சி உரிமை பெற்று கடமைகளைச் செலுத்துதலும் உள்ளடங்கிய செயல்பாடுகளே அரசியல் என வரையறை செய்யப்படுகிறது. இதில் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்ற முறையில் ஜனநாயகம், குடியரசு ஆகிய சொற்கள் பலம் பெற்றுள்ளன. அது மட்டுமல்ல, முந்தைய மன்னராட்சி இன்றைய மக்களாட்சியைவிட பின்தங்கியது என விமர்சிக்கிறோம். காரணம் அன்று வாய்ப்பு சமமானதாக இல்லை என்பதாகும். இனக் குழுக்கள் என்ற நிலையில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில், அதிகாரம் குழுத் தலைவரிடத்தில் மட்டும் இருந்ததில்லை. ஒரு கூட்டுக் குழுவினர் அதிகாரம் பொருந்தியவர்களாக இருந்தனர் என்ற விவரத்தை மானுடவியலாளர்கள் ஆய்வு மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்றைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதியாக இருக்கும் ஆனைமலையில் வசிக்கும் மலைமலசர் என்ற பழங்குடி மக்களின் குடியிருப்பை ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். 30 குடும்பங்கள் வசிக்கும் அந்தக் குடியிருப்பை 5 பேர் கொண்ட குழு நிர்வகிக்கிறது. ஒரே இனமாக இருந்தாலும், அவர்களுக்குள் உள்ள சந்ததி அடிப்படையில், 5 பேர் கொண்ட குழு ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. இன்றும் அதே நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். அவர்களுக்கு, ஊர் பெரியவர்கள் என்ற மரியாதையைத் தவிர, தனியாகப் பிரத்யேக சலுகைகள் எதுவும் இல்லை. அரசியல் இயக்கங்கள் இப்பழங்குடி மக்களை அணுக இயலாத அல்லது இவர்களின் எண்ணிக்கை வாக்கு வங்கி கணக்குக்கு உதவாது என்ற நிலையில், இம்மக்கள் தங்களின் பாரம்பரிய நிர்வாகத்தை இன்றளவும் பற்றி நிற்கிறார்கள். அதன் மூலம் தான் வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளை எதிர்கொள்கின்றனர். இப் பழங்குடியினரின், இனக்குழு தலைமை, மன்னராட்சியைவிட மேம்பட்ட அணுகுமுறையைக் கொண்டதாகத்  தெரிகிறது. மன்னராட்சி முறையை, நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து எதிர்த்த காரணத்தால், விடுதலை இந்தியாவில், மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. பின்னர் மன்னர்களாக இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட மானியமும்  ஒழிக்கப்பட்டது. இதை ஜனநாயகத்தின் வளர்ச்சி என்றே கருத வேண்டும்.

நாடு விடுதலை பெற்று 63 ஆண்டுகள் நிறைவுற்ற இன்றைய சூழலில், சிலர் அதே சந்ததி முறையைப் பின்பற்றினால், மக்கள், அரசியல் பங்கேற்பில்  இருந்து தங்களை விலக்கிக் கொள்வதற்குத் தூண்டப்படுகிறார்கள் எனப் பொருள் கொள்ளப்படும். வாரிசு முறையில் அதிகாரம் செலுத்திய, மன்னராட்சி காலத்திலும்கூட, மன்னன் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பல வரையறுக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

அத்தகைய வரையறைகளைப் பற்றி ஒழுகாத மன்னன் மதிக்கப்பட்டது இல்லை என்பதையும் சில வரலாற்றுத் தகவல்கள் மூலம் அறிகிறோம். வெ. சாமிநாத சர்மா இதுகுறித்து "புராதான இந்தியாவில் அரசியல்' எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அரசனுடைய காப்பாற்றும் கடமையானது திருடர், கயவர் ஆகியோரிடமிருந்து, மக்களைக்  காப்பாற்றுகிற  போலீஸ் வேலையைச் செய்து வருவது மட்டுமல்ல. பசி, பிணி, அறியாமை, அநீதி ஆகியவை இல்லாது மக்களைக் காக்க வேண்டும். மக்களுடைய புறவாழ்க்கைக்கு மட்டுமல்ல, அகவாழ்க்கைக்கும் அரசன் பொறுப்பாளி. அகவாழ்க்கையைப்  பண்படுத்தவும், தூய நிலையில் வைத்திருக்க வேண்டியதும் அரசனின் கடமை என வரையறை செய்திருந்ததாக சாமிநாத சர்மா கூறுகிறார்.

மன்னருக்கான வரையறை, இளவரசர்களுக்கும் பொருந்தும் என்றும், இளம் வயதிலேயே பயிற்சி பெறும் விதத்தில் அன்றைக்கு ஏற்பாடுகள் இருந்ததையும் படித்து அறிய முடிகிறது. ஆனாலும் இன்று நாம் வாழ்ந்து வரும் ஜனநாயக அமைப்பைவிட, பின்தங்கிய நிர்வாக முறை என்ற கருத்துதான், மன்னராட்சி குறித்து நாம் அறிந்திருப்பது.

இத்தகைய மன்னராட்சி முறையில் இருந்த உரிமைகளை விடவும், கூடுதல்உரிமைகளுடன், பங்கேற்புடன் அரசை உருவாக்குகிறபோது தான், மக்களாட்சி முறை வளர்ச்சி அடைந்த சமூகமாக மாறும். ஆனால், இன்றைய அரசியலில், அக்காலத்திய வாரிசு அரசியல் மேலோங்கி வருவதைப் பார்க்கிறபோது, நம் சமூகம் பின்னோக்கிப் பயணிக்கிறதா எனும் கேள்வி, தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

வாரிசுகளாக அறியப்படுபவர்கள் அரசியல் தளத்துக்கு வருகிறபோதே, பிறந்த நாள் சுவரொட்டிகளுடனும், பிரம்மாண்டமான கட் அவுட்களுடனும்தான் பிரவேசிக்கிறார்கள். அல்லது அரசியலில் அமைச்சராக, நாடாளுமன்ற, சட்டமன்றப் பொறுப்புகளில் இருந்து மறைந்த காரணத்தால், நடத்தப்படும் இடைத்தேர்தலின்போது, வேட்பாளராக அரசியல் பிரவேசம் அரங்கேற்றப்படுகிறது. அனேகமாக இடதுசாரி அரசியல் இயக்கங்களைத் தவிர, பெரும்பான்மையான அரசியல் கட்சிகளில், வாரிசு அரசியல் பின்பற்றப்பட்டு வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் அரங்கேறிவரும், குடும்ப அரசியல் திடீரென்று அதிகரித்துள்ளது. அதுவும் 1990-க்குப் பின் தீவிர வேகம் பெற்று இருக்கிறது. குறிப்பாகசமூக நீதிக்காகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட்டங்களில் ஈடுபட்ட மாநில அரசியல் கட்சிகளிலும், மத்திய அமைச்சராக இருந்து வரும், முதல் தலைமுறை அரசியல்வாதிகளின் குடும்பங்களில் இருந்தும் வாரிசு அரசியல் தீவிரமாகவும் வெளிப்படுகிறது.

அரசியலில் பெரும் பொறுப்புகளில் இருப்போரின் செல்வமதிப்பு உயர்ந்து வருவதற்கும், அரசியல் வாரிசு கொள்கையின் வளர்ச்சிக்கும் நெருக்கம் இருக்கிறது. இல்லையென்றால், கட்சியில் மிக உயர்ந்த பொறுப்பில் இல்லாத ஒருவரின் பிறந்த நாள், மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டிருக்குமா? வாரிசுகள் அரசியலில் ஈடுபடக்கூடாது என வாதிட விரும்பவில்லை. இளம் வயது தொடங்கி, அரசியலில் ஈடுபடாமல், நேரடியாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக வருவது அல்லது அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவது, சம்பந்தப்பட்ட கட்சியினரால் கேள்விக்கு உள்படுத்தப்பட வேண்டும்.
மருத்துவரின் வாரிசு மருத்துவர், பொறியாளரின் வாரிசு பொறியாளர், வழக்குரைஞரின் வாரிசு வழக்குரைஞர், ஆசிரியரின் வாரிசு ஆசிரியர் எனத் தொழில்கள் பரம்பரை சார்ந்ததாக, நம் சம காலத்தில் வளர்ந்து வருகிறதுதனக்குப் பின் தனது வாரிசு, தான் உருவாக்கி வைத்த செல்வத்தைப் பாதுகாக்கும், தேவையில் இருந்து, தனது வாரிசுகள் தன் தொழிலைப் பின்பற்றும் வகையில், வாரிசுகளின் கல்வியில் கவனம் செலுத்துகின்றனர். இதுவே ஒரு புதிய வேலைப் பிரிவினை அல்லது குலக்கல்வித் திட்டம்போல் செயல்படுகிறது.

இந்நிலையில் அரசியல் தலைவரின் வாரிசும், அரசியல் தலைவராக அடையாளம் காட்டப்படுவது, அரசியல் குலத்தொழில் என்பதை நோக்கிச் சென்றுவிடும். இப்போது பெற்று இருக்கிற சமூக நீதி, பெண்ணுரிமை, தனித்தொகுதி ஒதுக்கீடு போன்றவை, மெல்லப் புதைக்கப்படும் என்பதை ஜனநாயக ஆதரவாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்).

நன்றி: தினமணி 25 நவம்பர் 2010