வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

11 மே, 2011

பூச்செடியில் பூக்கும் நஞ்சு

கைராசியோ முகராசியோ
தோட்டத்து மண் ராசியோ
எதுவெனத் தெரியவில்லை
என் தோட்டத்தில் வைக்கும்
எந்தச் செடியும் செழிப்பதில்லை
விலக்காக இரண்டு மாதத்திற்குமுன் பதியமிட்ட
குண்டுமல்லிக் கொடியொன்று
மண்ணோடு உறவு கொண்டது
அதில் உயிர்த்தெழும்
ஒவ்வொரு தளிரும் தன் பரப்பில் நெய்யேந்தி
என் மகிழ்ச்சியில் சொரியும்
இடையில் வாடிப்போகும் சமயங்களில்
வானத்தைச் சபிப்பேன்
அலுவல் முடிந்து வீடு திரும்ப
உண்ணுவதில்லை உறங்குவதில்லை
ஒரு குழந்தையைக் கையேந்திக்
கொஞ்சுதல் போல
அதன் தளிர்கள் கன்னத்தோடேற்படுத்தும்
உரசல் ஏதோ கிளுகிளுப்பை மூட்டும்
என் உணவில் பாதியை
அதற்குப் பகிர்ந்தளிப்பேன்
என் படுக்கையில் அதற்கும் இடம் கொடுப்பேன்
என் சுவாசத்திலும் பாதியை அதற்குப் பிரித்தளிப்பேன்
ஏங்க ஏங்க வைத்துவிட்டு
நெடுநாளைக்குப் பிறகு
ஒரே ஒரு போதினைப் பிரசவித்தது
அன்று முதல் அலுவலுக்காக
வெளியில் செல்வதற்கும்
எனக்கு விருப்பமில்லை
நிறைமாத கர்ப்பிணி மீது கொள்ளும் கவனமென
இப்பொழுது அதன் மீதுள்ளது
என் கவனமெல்லாம்
நள்ளிரவில் மேகம் சூழ்ந்து
மழை தன் வரவைக்
குளிர்க் காற்றிடம் சொல்லியனுப்பியது
மொட்டை முகிழ்க்கத் தொடங்கி
சிலு சிலுவெனத் தன் உடலைச்
சிலிர்த்துக் கொண்டது
மகிழ்ச்சியால் செடியை வெளியில் விட்டு
என்னை உள்ளுக்குள் பொதித்துக் கொண்டேன்
விடிந்தெழுந்து கவனம் கொண்டு
முதல் வேளையாய் வெளியில் பார்க்கிறேன்
ஒரு கொலைச் சம்பவத்தைக் கண்ட
பதை பதைப்பு என்னுள்
மழை கொன்ற அரும்பைக்
கையிலெடுக்கிறேன்
சேறெல்லாம் அப்பிக் கொண்டு
செஞ்சிவப்பில் நஞ்சேறிக் கிடக்கிறது.

10 மே, 2011

அறைக்குள் இறைந்து கிடந்தவன்


ஜனசஞ்சாரமற்ற புறவழிச்சாலையொன்றின் வழியே
கருக்கிருட்டில் சிகரெட் சினேகிதனோடு உரையாடியபடியே
வாயோடு வாய் வைத்த முத்தக் காட்சிகளை
இலவசமாய் ரசித்து
பறக்கும் ரயில் பிடித்து அறையை அடைந்தேன்
அவ்வறைக்குள் நுழையும் முன்பாகவே
அங்கொரு சக்திவேல் இறைந்து கிடந்தான்
இங்கென்ன ஆச்சரியம் என்றால்
அவன் எப்படி உள் நுழைந்திருக்க முடியும் என்பதே
பூட்டிய கதவு பூட்டியபடியே கிடக்கிறது
வெளிப்பூட்டோடு
ஞாபக மறதி அதிகம் என்பதால்
ஒரு முறைக்குப் பல முறை
ஆராய்ந்துதான் அறையைக் காலையில் பூட்டினேன்
தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது.
அவன் இறைந்து கிடந்த சூழலும்
அறை முழுக்கப் பரவிக்கிடக்கும் நறுமணமும்
ஏதோவொரு அசம்பாவிதத்தை உணர்த்துகிறது
இன்னொரு முறை இறைந்து கிடந்தவனை
ஒழுங்கு படுத்திவிட்டு
அறையை ஆராய்ந்தேன்
குள்ளமாய்
முகத்தில் கரும்புள்ளிகள் படர்ந்த
கரும்பூனையொன்று வாசலை நோக்கிப் பயந்தோடியது.