ஜனசஞ்சாரமற்ற புறவழிச்சாலையொன்றின் வழியே
கருக்கிருட்டில் சிகரெட் சினேகிதனோடு உரையாடியபடியே
வாயோடு வாய் வைத்த முத்தக் காட்சிகளை
இலவசமாய் ரசித்து
பறக்கும் ரயில் பிடித்து அறையை அடைந்தேன்
அவ்வறைக்குள் நுழையும் முன்பாகவே
அங்கொரு சக்திவேல் இறைந்து கிடந்தான்
இங்கென்ன ஆச்சரியம் என்றால்
அவன் எப்படி உள் நுழைந்திருக்க முடியும் என்பதே
பூட்டிய கதவு பூட்டியபடியே கிடக்கிறது
வெளிப்பூட்டோடு
ஞாபக மறதி அதிகம் என்பதால்
ஒரு முறைக்குப் பல முறை
ஆராய்ந்துதான் அறையைக் காலையில் பூட்டினேன்
தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது.
அவன் இறைந்து கிடந்த சூழலும்
அறை முழுக்கப் பரவிக்கிடக்கும் நறுமணமும்
ஏதோவொரு அசம்பாவிதத்தை உணர்த்துகிறது
இன்னொரு முறை இறைந்து கிடந்தவனை
ஒழுங்கு படுத்திவிட்டு
அறையை ஆராய்ந்தேன்
குள்ளமாய்
முகத்தில் கரும்புள்ளிகள் படர்ந்த
கரும்பூனையொன்று வாசலை நோக்கிப் பயந்தோடியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக