வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

25 ஜூலை, 2011

வீரப்ப சுவாமி கதைப்பாடல்


பாண்டவ பத்தினியின்
முடிவுறாப் புடவையாய்
முன்னால் கிடக்கும்
இருபது முப்பது வருடங்கள்
கற்பனைகளின் சுழல் கரத்தால்
சிக்கென்று இழுக்கப்பட்டன

முதுகுக்குப் பின்னால் ஓடி விழுந்த பின்னர்
சரீரம்
சண்டமாருதத்தின் மேல் ஆரோகணித்து
தமிழகத்தின் மேடு பள்ளங்களில்
முகம் புதைத்துக்
காமம் தணிக்கப் புறப்பட்டது

சிங்காரச் சென்னையில் புறப்பட்ட பயணம்
மதுரை, கன்னியாகுமரி,
ஊட்டி, கொடைக்கானல் எனத் தொடர்ந்ததில்
கால்வாசிக் காமம் கரைந்து போனது

வித்தியாசமாய் இருக்கட்டும் எனும் நினைப்பில்
மாதேஸ்வரன் மலை
திம்மம்
சத்திய மங்கலம் பகுதிகளில்
கால் பாவுகையில்
காதில் புகுந்த வண்டொத்த ஓசை
எஞ்சிய காமத்தை எரித்துப் போட்டது

ஓசையின் இசையிலும் பொருளிலும் லயித்த என்மை
அதனில் மயங்கிப் போனது

சிங்கம் ஒன்று ஜனனம் கண்டதாய்த்
தொடங்கிய கதை
சிறுநரி பலதால் வஞ்சிக்கப்பட்ட
இசையில் மிதந்தது

தம்மினம் தழைக்க வித்திட்டுவிட்டு
நெஞ்சுரம் கொண்ட நிகரற்ற சாமியாய்
மூலக்காட்டில் குடிகொண்டதாய்
முடிந்ததந்த கதைப்பாடல்.

குறிப்பு: சந்தன மரக் கடத்தல் வீரப்பன்(!) சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்துக்காக 04-11-2005 அன்று எழுதப்பட்டது.

23 ஜூலை, 2011

ஒரு ஆல மரம் சாய்கிறது...!


அப்பாவி யாய்நின்ற ஒருவன் – அவன்
சொப்பனத்தில் கப்பலிட்ட ஒருவள் – அதைத்
தப்பாமல் துளைபோட்டு
அப்பாலே கவிழ்த்திட்டு
மறுத்தேன் – மனம் – வெறுத்தேன்.

ஐந்தாண்டு தாண்டியபின் மணப்பேன் – பின்
ஐயமேதும் இல்லாமல் அணைப்பேன் – இதை
ஒப்பினால்நான் காதலிப்பேன்
ஒப்பவில்லை என்றாலோ
காதல் – அது – போதல்.

என்றபடி கூறினாலும் நின்றாள் – எனை
எண்ணூறு பாகமாய்க் கொன்றாள் – மனம்
காதலெனுங் கொடியேற
காமமெனும் மலையேறும்
தேகம் – என் – ஆகம்.

முத்தங்கள் பன்னூறு பகிர்ந்தோம் – இரு
முந்நூறு நாட்களுடல் வகிர்ந்தோம் – என்
ஓதற்கா ரணம்பற்றி
ஓரிருதிங் கட்பிரிய
மறந்தாள் – காதல் – துறந்தாள்.

கடிதங்கள் எத்தனையோ விடுத்தேன் – அதில்
காமத்தை எழுத்தாகத் தொடுத்தேன் – ஒரு
இடிநாளில் இன்னாத
எழுத்தென்னும் விஷக்கடிதம்
வந்தது – திகில் – தந்தது.

கர்த்தருக்கோ அடித்த ஆணி கையில் – என்
கண்மணியோ இதயத்தின் மெய்யில் – அவள்
நர்த்தனம்பு ரிந்தபடி
நடமாடு கிறாளென்னுள்
மயிலாய் – மொழி – குயிலாய்.

இந்தவேளை முதலாய்ச் சகோதரி – எனை
எப்போதும் வெறுக்காமல் ஆதரி – என
பந்தபாசம் அத்தனையும்
பாராமல் சொன்னாள் “நான்
நண்பி” – நானோ – வெம்பி.

உன் பெயரன் அழுகின்றேன் ஆயா – எனை
உமாவோடு சேர்த்தேவைப் பாயா? – என்று
நன்பல்லி குரல்கேட்டு
நாத்திகத்தை மறந்தபடி
கெஞ்சுவேன் – பசியால் – துஞ்சுவேன்.

வானின்கண் தோன்றும்வில் இல்லை – உயிர்
வஞ்சிமறத் தற்பெரிய தொல்லை – உடல்
ஊனின்றி உயிரின்றி
உலவலாம்உன் நினைப்பின்றி
நடக்காது – அடி – கடக்காது.

வாழ்வென்றால் உன்னோடொன் றாவேன் – அதில்
மாற்றமென்றால் மணக்காமல் சாவேன் – இப்
பாழ்மனத்தால் பிறிதுமொரு
பாங்கான பெண்நினைக்க
மாட்டேன் - உறுதி - வேட்டேன்.

11 மே, 2011

பூச்செடியில் பூக்கும் நஞ்சு

கைராசியோ முகராசியோ
தோட்டத்து மண் ராசியோ
எதுவெனத் தெரியவில்லை
என் தோட்டத்தில் வைக்கும்
எந்தச் செடியும் செழிப்பதில்லை
விலக்காக இரண்டு மாதத்திற்குமுன் பதியமிட்ட
குண்டுமல்லிக் கொடியொன்று
மண்ணோடு உறவு கொண்டது
அதில் உயிர்த்தெழும்
ஒவ்வொரு தளிரும் தன் பரப்பில் நெய்யேந்தி
என் மகிழ்ச்சியில் சொரியும்
இடையில் வாடிப்போகும் சமயங்களில்
வானத்தைச் சபிப்பேன்
அலுவல் முடிந்து வீடு திரும்ப
உண்ணுவதில்லை உறங்குவதில்லை
ஒரு குழந்தையைக் கையேந்திக்
கொஞ்சுதல் போல
அதன் தளிர்கள் கன்னத்தோடேற்படுத்தும்
உரசல் ஏதோ கிளுகிளுப்பை மூட்டும்
என் உணவில் பாதியை
அதற்குப் பகிர்ந்தளிப்பேன்
என் படுக்கையில் அதற்கும் இடம் கொடுப்பேன்
என் சுவாசத்திலும் பாதியை அதற்குப் பிரித்தளிப்பேன்
ஏங்க ஏங்க வைத்துவிட்டு
நெடுநாளைக்குப் பிறகு
ஒரே ஒரு போதினைப் பிரசவித்தது
அன்று முதல் அலுவலுக்காக
வெளியில் செல்வதற்கும்
எனக்கு விருப்பமில்லை
நிறைமாத கர்ப்பிணி மீது கொள்ளும் கவனமென
இப்பொழுது அதன் மீதுள்ளது
என் கவனமெல்லாம்
நள்ளிரவில் மேகம் சூழ்ந்து
மழை தன் வரவைக்
குளிர்க் காற்றிடம் சொல்லியனுப்பியது
மொட்டை முகிழ்க்கத் தொடங்கி
சிலு சிலுவெனத் தன் உடலைச்
சிலிர்த்துக் கொண்டது
மகிழ்ச்சியால் செடியை வெளியில் விட்டு
என்னை உள்ளுக்குள் பொதித்துக் கொண்டேன்
விடிந்தெழுந்து கவனம் கொண்டு
முதல் வேளையாய் வெளியில் பார்க்கிறேன்
ஒரு கொலைச் சம்பவத்தைக் கண்ட
பதை பதைப்பு என்னுள்
மழை கொன்ற அரும்பைக்
கையிலெடுக்கிறேன்
சேறெல்லாம் அப்பிக் கொண்டு
செஞ்சிவப்பில் நஞ்சேறிக் கிடக்கிறது.

10 மே, 2011

அறைக்குள் இறைந்து கிடந்தவன்


ஜனசஞ்சாரமற்ற புறவழிச்சாலையொன்றின் வழியே
கருக்கிருட்டில் சிகரெட் சினேகிதனோடு உரையாடியபடியே
வாயோடு வாய் வைத்த முத்தக் காட்சிகளை
இலவசமாய் ரசித்து
பறக்கும் ரயில் பிடித்து அறையை அடைந்தேன்
அவ்வறைக்குள் நுழையும் முன்பாகவே
அங்கொரு சக்திவேல் இறைந்து கிடந்தான்
இங்கென்ன ஆச்சரியம் என்றால்
அவன் எப்படி உள் நுழைந்திருக்க முடியும் என்பதே
பூட்டிய கதவு பூட்டியபடியே கிடக்கிறது
வெளிப்பூட்டோடு
ஞாபக மறதி அதிகம் என்பதால்
ஒரு முறைக்குப் பல முறை
ஆராய்ந்துதான் அறையைக் காலையில் பூட்டினேன்
தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது.
அவன் இறைந்து கிடந்த சூழலும்
அறை முழுக்கப் பரவிக்கிடக்கும் நறுமணமும்
ஏதோவொரு அசம்பாவிதத்தை உணர்த்துகிறது
இன்னொரு முறை இறைந்து கிடந்தவனை
ஒழுங்கு படுத்திவிட்டு
அறையை ஆராய்ந்தேன்
குள்ளமாய்
முகத்தில் கரும்புள்ளிகள் படர்ந்த
கரும்பூனையொன்று வாசலை நோக்கிப் பயந்தோடியது.