வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

11 மே, 2011

பூச்செடியில் பூக்கும் நஞ்சு

கைராசியோ முகராசியோ
தோட்டத்து மண் ராசியோ
எதுவெனத் தெரியவில்லை
என் தோட்டத்தில் வைக்கும்
எந்தச் செடியும் செழிப்பதில்லை
விலக்காக இரண்டு மாதத்திற்குமுன் பதியமிட்ட
குண்டுமல்லிக் கொடியொன்று
மண்ணோடு உறவு கொண்டது
அதில் உயிர்த்தெழும்
ஒவ்வொரு தளிரும் தன் பரப்பில் நெய்யேந்தி
என் மகிழ்ச்சியில் சொரியும்
இடையில் வாடிப்போகும் சமயங்களில்
வானத்தைச் சபிப்பேன்
அலுவல் முடிந்து வீடு திரும்ப
உண்ணுவதில்லை உறங்குவதில்லை
ஒரு குழந்தையைக் கையேந்திக்
கொஞ்சுதல் போல
அதன் தளிர்கள் கன்னத்தோடேற்படுத்தும்
உரசல் ஏதோ கிளுகிளுப்பை மூட்டும்
என் உணவில் பாதியை
அதற்குப் பகிர்ந்தளிப்பேன்
என் படுக்கையில் அதற்கும் இடம் கொடுப்பேன்
என் சுவாசத்திலும் பாதியை அதற்குப் பிரித்தளிப்பேன்
ஏங்க ஏங்க வைத்துவிட்டு
நெடுநாளைக்குப் பிறகு
ஒரே ஒரு போதினைப் பிரசவித்தது
அன்று முதல் அலுவலுக்காக
வெளியில் செல்வதற்கும்
எனக்கு விருப்பமில்லை
நிறைமாத கர்ப்பிணி மீது கொள்ளும் கவனமென
இப்பொழுது அதன் மீதுள்ளது
என் கவனமெல்லாம்
நள்ளிரவில் மேகம் சூழ்ந்து
மழை தன் வரவைக்
குளிர்க் காற்றிடம் சொல்லியனுப்பியது
மொட்டை முகிழ்க்கத் தொடங்கி
சிலு சிலுவெனத் தன் உடலைச்
சிலிர்த்துக் கொண்டது
மகிழ்ச்சியால் செடியை வெளியில் விட்டு
என்னை உள்ளுக்குள் பொதித்துக் கொண்டேன்
விடிந்தெழுந்து கவனம் கொண்டு
முதல் வேளையாய் வெளியில் பார்க்கிறேன்
ஒரு கொலைச் சம்பவத்தைக் கண்ட
பதை பதைப்பு என்னுள்
மழை கொன்ற அரும்பைக்
கையிலெடுக்கிறேன்
சேறெல்லாம் அப்பிக் கொண்டு
செஞ்சிவப்பில் நஞ்சேறிக் கிடக்கிறது.

10 மே, 2011

அறைக்குள் இறைந்து கிடந்தவன்


ஜனசஞ்சாரமற்ற புறவழிச்சாலையொன்றின் வழியே
கருக்கிருட்டில் சிகரெட் சினேகிதனோடு உரையாடியபடியே
வாயோடு வாய் வைத்த முத்தக் காட்சிகளை
இலவசமாய் ரசித்து
பறக்கும் ரயில் பிடித்து அறையை அடைந்தேன்
அவ்வறைக்குள் நுழையும் முன்பாகவே
அங்கொரு சக்திவேல் இறைந்து கிடந்தான்
இங்கென்ன ஆச்சரியம் என்றால்
அவன் எப்படி உள் நுழைந்திருக்க முடியும் என்பதே
பூட்டிய கதவு பூட்டியபடியே கிடக்கிறது
வெளிப்பூட்டோடு
ஞாபக மறதி அதிகம் என்பதால்
ஒரு முறைக்குப் பல முறை
ஆராய்ந்துதான் அறையைக் காலையில் பூட்டினேன்
தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது.
அவன் இறைந்து கிடந்த சூழலும்
அறை முழுக்கப் பரவிக்கிடக்கும் நறுமணமும்
ஏதோவொரு அசம்பாவிதத்தை உணர்த்துகிறது
இன்னொரு முறை இறைந்து கிடந்தவனை
ஒழுங்கு படுத்திவிட்டு
அறையை ஆராய்ந்தேன்
குள்ளமாய்
முகத்தில் கரும்புள்ளிகள் படர்ந்த
கரும்பூனையொன்று வாசலை நோக்கிப் பயந்தோடியது.

23 ஏப்ரல், 2011

சுதந்திரமாய்ப் பறக்கும் பட்டம்


சிறகுகள் படபடக்க நிற்கும் இடத்திலிருந்து
கற்பனைக்கு எட்டாத உயரத்தில்
பறந்து கொண்டிருப்பாய்
உன் கைகளும் கால்களும்
அததன் போக்கில் தன்
கடமையைச் செய்து கொண்டிருக்கின்றன
வெகு யுகங்களாய்
யாரும் புரியாத சாதனையை
நீ நிகழ்த்திவிட்டதாய் உன்னை அறிந்தவர்கள்
புளகாங்கிதத்தோடு
புகழக்கேட்டிருப்பாய்
பாராட்டு மொழியில்
உன் உடல் முழுக்கவும்
உடலை இரும்பெனத் துளைக்கும்
பனிக்கட்டியாய்க் கெட்டித்துப் போயிருக்கும்
ஆனாலும், மறந்துவிடாதே
இந்த பூமியின் முளைக்குச்சியில்
மாயக் கயிற்றால் கட்டப்பட்டிருக்கின்றன
உனது கைகளும் கால்களும்
சிறகுகளோடு சேர்த்து.

18 ஏப்ரல், 2011

49 ஓ - வாக்களிக்க விருப்பம் இல்லை வசதியில் திருத்தம் தேவை!

வாக்காளர்கள் மத்தியில், "யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்கிற பிரிவு பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது,'' என்று தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார். தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, "49 ஓ' குறித்து தெரிவித்த கருத்து: சட்டசபை தேர்தலில், 78 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தலை விட, 7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொருவரும், ஓட்டளிப்பது ஜனநாயக கடமை என்பது வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில், யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை என்கிற, "49 ஓ' பிரிவு, குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு செய்தித்தாள், ஓட்டுச்சாவடி ஆகியவற்றில் "49 ஓ' பிரிவு குறித்து விளம்பரப்படுத்தப்பட்டது. தேர்தல் கமிஷனின், இந்த நடவடிக்கையால், தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் மத்தியில், "49 ஓ' பிரிவு குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நரேஷ் குப்தா கூறினார்.

என்று நாளிதழ்களிலும் பிற இதழ்களிலும் செய்திகள் வெளியாகி பெருமையோடு மார்தட்டிக் கொள்கின்றன. இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்த இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் அதே சமயத்தில் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிர்பந்தமும் வாக்காளர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. பல சிரமங்களுக்குப் பிறகுதான் 49 ஓ வசதியைப் பயன்படுத்த முடியும். எழுத்து மூலமாக எழுத வேண்டும்.... கையெழுத்திட வேண்டும்.... வாக்காளர் 49 ஓ-வைப் பயன்படுத்துகிறார் என்ற செய்தி வாக்களிக்கும் அறையில் (Booth) உள்ள அனைவருக்கும் தெரிய வருகிறது. ஆனால்,  வேட்பாளருக்கு வாக்களிக்கும்போது மட்டும் மறைமுகமாக வாக்களிக்கும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த 49 ஓவுக்கு மட்டும் என்ன அவலம்? செய்தி ஊர் முழுக்கத் தெரிய வருகிறது. தான் அளிக்கும் வாக்கு யாருக்கு அளிக்கப்பட்டது என்ற ரகசியத்தைக் காக்க வேண்டியதும் தேர்தல் ஆணையத்தின் கடமை. இந்த அவலத்தைப் போக்க வேண்டும். அதாவது 49 ஓ வசதி வாக்குப் பதிவு எந்திரத்திலேயே ஒரு வசதியாக இருக்க வேண்டும். தவிர்த்து அறையில் உள்ள பணியாளர்களால் உதவப்பட்டு 49 ஓ வசதியைப் பயன்படுத்துமாறு இருக்கும் இந்த நிலைமை அடுத்த தேர்தலில் அல்லது பிற மாநிலத் தேர்தலில் கட்டாயம் மாற்றப்பட வேண்டும். அப்பொழுதுதான் நம் தலைவர்களின்! உண்மை நிலையை உணர முடியும். மக்களின் மன நிலையை அறிய முடியும்.